திங்கள், 23 செப்டம்பர், 2013

வீரத்துறவியும் மகாகவியும்…

அறம் அறக்கட்டளை திருப்பூர் பார்க் கல்லூரியில் நடத்திய விழாவில் பங்கேற்ற தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாலர் ஸ்ரீ ம.கொ.சி.ராஜேந்திரன் (இடமிருந்து இரண்டாவது). உடன் உள்ளோர்: காந்திய மக்கள் இயக்க நிர்வாகி ஸ்ரீ சுரேஷ்பாபு, பேராசிரியர் இரா.குப்புசாம்ய், கல்லூரி முதல்வர் ஸ்ரீ ஜெ.திருமாறன், அறம் அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீ கு.சிவகுமார்.
அறம் அறக்கட்டளை திருப்பூர் பார்க் கல்லூரியில் நடத்திய விழாவில் பங்கேற்ற தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ம.கொ.சி.ராஜேந்திரன் (இடமிருந்து இரண்டாவது). உடன் உள்ளோர்: காந்திய மக்கள் இயக்க நிர்வாகி ஸ்ரீ சுரேஷ்பாபு, பேராசிரியர் இரா.குப்புசாமி, கல்லூரி முதல்வர் ஸ்ரீ ஜெ.திருமாறன், அறம் அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீ கு.சிவகுமார்.

மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய ஒற்றுமை உள்ளது. எல்லொரும் கடவுளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடிக்கொண்டிருந்த நேரத்தில், பாரதி, சுதந்திர உணர்வின்றி உறங்கிக் கிடந்த இந்திய மக்களுக்கு சுதந்திரத் தாகத்தை ஊட்டும் வகையில் பாரதமாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சியே பின்வருமாறு பாடினார்.

“பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்;
புன்மை இருட்கணம் போயினயாவும்;
எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழி துயில்கின்றனை இன்னுமெந்தாயே,
வியப்பிது காண்! பள்ளி எழுந்தருளாயே! ”

 பாரதியாரைப் போலவே வீரத்துறவி விவேகானந்தரும் தம் எழுத்திலும் பேச்சிலும் விழித்தெழுவதையே (Awakening) தம் தலையாய செய்தியாகக் கொண்டார்; “தேசத்திற்கு தொண்டுசெய்வது, அதனுடைய உழைக்கும் மக்களுக்கு தொண்டு செய்வதற்குச் சமம்’’ என்று அவர் கூறியுள்ளார். இதனையே சுவாமி விவேகானந்தர்  தன்னுடைய ஆன்மிகத் தேடலின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

“நீங்கள் பகவத் கீதையைப் படிப்பதைக் காட்டிலும், கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள்” என்று இந்திய வாலிபர்களுக்கு சுவாமிஜி சொன்னார்.

ஏனெனில் “தங்களுடைய தோள்கள் வலிமையாக இருக்கும்போது மட்டுமே வாலிபர்கள் பகவத்கீதையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

பலவீனமான. வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை உள்ள இளைஞனுக்கு கீதையை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவை என்பது சுவாமிகளின் கருத்து. வெறுமனே கீதை ஆராய்ச்சி செய்தால் அவனது மூளை மேலும் உலர்ந்து போய்விடும், சரீரம் மேலும் தளர்ந்து போய் விடும் என அவர் புதிய விளக்கமே தந்தார். மனிதனை ஒன்றுக்கும் உதவாதவன் ஆக்குவது விவேகானந்தரின் செய்தியல்ல; கிருஷ்ண பரமாத்மாவின் செய்தியும் அல்ல. மனிதனை நல்ல தீரனாகவும் வீரனாகவும் ஆக்குவதே அவர்களின் செய்தி.

இதையே, ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடலுறுதி வேண்டும்’ என்று பராசக்தியிடம் பாரதி பிரார்த்திக்கிறார். ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்றும் அவர் கேட்கிறார்.

“அச்சம் தவிர், ஆண்மை தவறேல், உடலினை உறுதி செய், போர்த்தொழில் பழகு, யௌவனம் காத்தல் செய், வீரியம் பெருக்கு” என்றெல்லாம் புதிய ஆத்திசூடியில் கூறும் மகாகவி பாரதி, அதில் “தேசத்தைக் காத்தல் செய்” என்றும், “வையத் தலைமை கொள்” என்றும் கூறுகிறார். இது சுவாமி விவேகானந்தரின் தாக்கமே எனில் மிகையில்லை.

‘பலமே வாழ்வு; பலவீனமே மரணம்’ என்கிறர் சுவாமி விவேகானந்தர். மகாகவி பாரதியோ, ‘இளைத்தல் இகழ்ச்சி, ஏறு போல் நட’ என்கிறார்.
விவேகானந்தர் என்ற மாமனிதர் காவியுடை தரித்த சன்னியாசி. ஆனால் பாரதியார் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர். இது மட்டுமே இவர்களுக்கு இடையே உள்ள வேற்றுமை.

முட்டையானது வெளிப்புற சக்தி கொண்டு உடைக்கப்பட்டால் அதனுள் இருக்கும் உயிரானது அழிக்கப்படுகிறது. ஆனால் அதே முட்டையானது உட்புற சக்தி கொண்டு உடைக்கப்படுமாயின் அங்கு ஒரு உயிர் உருவாகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து ஆகும்.

உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ் பெற்று விளங்கியவை, நம் நாட்டின் தலைசிறந்த  பல்கலைக்கழகங்கள் நாளந்தா மற்றும் தட்சசீலம் ஆகும். இவையே நம் நாட்டில் (உலகில்) முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், இங்குதான் அக்காலத்திலேயே வருடத்திற்கு 15,000 மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற்றனர். மேலும் அங்கு 1,500 ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர்.

இப்படி பெருமை பெற்ற இந்த பல்கலைக்கழகங்களை முகலாய மன்னன் ஒருவன் தனது 11 படைவீரர்களுடன் வந்து தீயிட்டுக் கொளுத்தினான். பல்வேறு அரிய நூல்களையும் அரிய பொக்கிஷங்களையும் கொண்ட அந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டு வாரங்கள் எரிந்து கொண்டிருந்த்து.

இக்காரியத்தை செய்த மன்னன் நம்நாட்டின் பெருமையை அறிந்திருந்தால் இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தை இழந்திட நேர்ந்திருக்காது. எனவே அனைத்து மக்களும் நாம் வாழும் நாடு நமதென்பதை உணர வேண்டும்; அறிய வேண்டும்; அதன் பெருமையைப் போற்ற வேண்டும்.

ஆனால் இன்று நம் நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக் கழகங்களின் நிலை குறிப்பிடப்படும் படியாக இல்லை என்பதை அறிந்து நாம் வேதனைப் பட வேண்டியுள்ளது. உலகின் சிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது வேதனை அளிப்பதல்லவா?

திருப்பூர் பார்க் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் ரதத்திற்கு மலர் தூவி வணங்கும் பேராசிரியர் இரா.குப்புசாமி.
மலரஞ்சலி


ஒரு நாட்டின் மன்னர் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்த மன்னருக்கு பிறந்த நாள். ஊரெங்கும் விழாக் கோலம் பூண்டிருந்த்து. மன்னர் யானை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது மக்கள் அனைவரும் அவருக்கு மலர்கள் தூவி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 
அப்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து ராஜாவின் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் சிப்பாய்களை அழைத்து இக்காரியத்தைச் செய்தவரை இழுத்து வரும்படி உத்தரவிட்டார்.

சிப்பாய்கள் அனைத்து இடங்களிலும் தேடி, மாமரத்தின் அடியில் நின்று கல்லால் மாமரத்தை அடித்துக் கொண்டிருந்த வயதான பெண்ணை இழுத்துச் சென்று மன்னர் முன்பு நிறுத்தினர். அப்பெண்மணி நடந்தவற்றைக் கூறினார். உடனே மன்னர் தீர்ப்பளிக்காமல், நாளை அரசவைக்கு வருமாறு மூதாட்டியிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் அவையில் அனைவரும் பாட்டிக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற பதட்டத்துடன் காணப்பட்டனர். மன்னர் கல்லெறிந்த பாட்டிக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார். அனைவருக்கும் ஆச்சரியம். குழப்பம் தீராமல் மன்னரிடமே சிலர்  காரணம் கேட்டனர்.

அதற்கு அரசர், கல்லை வீசியதற்கு ஓரறிவுள்ள மரமே கனிகளைத் தருகிறது. ஆனால் ஆறறிவு உள்ள நான் அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கினால் நான் மரத்தை விடத் தாழ்ந்தவன் ஆகிவிடுவேனே என்று பதில் கூறினார். இக்கதையில் வரும் மன்னரைப் போல் நாம் நமக்குத் தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் சாராம்சம் என்னவென்றால், இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றை தலையாய கொள்கையாக கொண்டுள்ளது; மக்கள் யாரும் மதவெறி கொள்ளக் கூடாது என்பதே.

உலகம் முழுவதிலும் யூதர்கள் மற்றும் பார்சிகளை விரட்டிய பொழுது அவர்களை ஆதரித்தது நம் நாட்டை ஆண்ட மன்னர்களும் மக்களுமே. அதிலும் குறிப்பாக யூதர்கள் நம் நாட்டின் கேரளப் பகுதிக்கு வந்தபோது, மலபார் பகுதியை ஆண்ட மன்னர் ராமவர்மா தன்னுடைய அரண்மனைக் கோவில் அமைந்துள்ள மட்டன்சேரி பகுதியில் பல ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்து அவர்கள் வாழவும், வழிபாட்டுக்கும் வழி செய்து கொடுத்தார். கி.பி 1568-ஆம் ஆண்டுக் கட்டப்பட்ட ஆலயமானது Paradesi Synagogue என்ற பெயரில் இன்றுவரை வழிபாட்டுத்தலமாக உள்ளது.
இந்திய மண்ணில் எத்தனையோ மகான்களும், முனிவர்களும், புலவர்களும், யோகிகளும் தோன்றியுள்ளனர். அவர்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் முக்கிய இடம் பெற்றவர். அவர் எழுதிய 1330 குறளில் ஒரு இடங்களில் கூட தமிழ் என்ற வார்த்தை இல்லை. மேலும் எந்த ஒரு நாட்டையோ, மதத்தையோ, சாதியையோ அவர் குறிப்பிடவில்லை. அதனால்தான் நாம் திருக்குறளை ‘உலகப் பொதுமறை’ என்கிறோம்.

அதே வரிசையில் சித்தார்த்தராகப் பிறந்து உலக இன்பத்தைத் துறந்து ஞானியான புத்தர் மகத்தான மனிதர். நேற்று வரை உலகில் உள்ள அத்தனை இன்பத்தையும் அனுபவித்து வந்த அவர், பசி, பிணி, மூப்பு ஆகியவற்றைக் கண்ட அடுத்த நாள், துறவு நிலையை அடைந்தார் என்றால் அவரது செயல் சாதாரணமானதல்ல. எந்த ஆயுதமும் இன்றி சீனாவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரதம் அடிமைப்படுதியது சீன அறிஞர் ஒருவர் கூறினார். அவர் கூறியது புத்தரின் போதனைகளை சீனா ஏற்றுள்ளதைத் தான்.

அதுபோலத் தான் பாரதத்தின் ஆன்மிக வானில் என்றும் பிரகாசிக்கும், ஒளி வீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம். தெய்வீகத்தையும், தேசியத்தையும் ஒன்றிணைத்து நம் நாட்டு மக்களிடையே புதிய பரிமாணத்தையும், பாதையையும் வகுத்தவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளைப் பரப்பி, மக்களிடையே விழிப்புணர்வினை உருவாக்கும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். அதுவே சுவாமிஜியின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களில் நாம் செய்யக் கூடியதாக இருக்கும்.

குறிப்பு:
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்; சமூக சேவகர்.
கடந்த 11.09.2013 அன்று, சுவாமி விவேகானந்தரின் 120-ஆவது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவு தின விழா, திருப்பூர் பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பார்க் கல்லூரி, தேசிய சிந்தனைக் கழகம் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின. கல்லூரி வளகத்திற்கு வருகை தந்த சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி ரதத்திற்கும் அதில் வைக்கப்பட்டிருந்த மகாகவி பாரதி படத்திற்கும் கல்லூரி மானவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இவ்விழாவில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ம.கொ.சி.ராஜேந்திரன்,  “பாரதியும் விவேகானந்தரும்”  என்ற  தலைப்பில்  ஆற்றிய உரை இது.
அவரது பேச்சை கட்டுரையாகத் தொகுத்தவர்:  கல்லூரியின்  மூன்றாம் ஆண்டு கணிப்பொறித் தொழில்நுட்ப மாணவர் ஸ்ரீ நாகராசன்.
விழாவுக்கு ஏற்பாடு செய்த்துடன், விழா நிகழ்வுகளை தொகுத்து, புகைப்படங்களையும் வழங்கிய திருப்பூர் பார்க் கலை கல்லூரி முதல்வர் ஸ்ரீ ஜெ.திருமாறன் அவர்களுக்கு நன்றி.
காண்க:

நன்றி: விவேகானந்தம் 150.காம் இணையதளம் 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக