ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

வித்யாரம்பம்- 2022 எழுத்தறிவிப்போர்


அறம் அறக்கட்டளை - வித்யாரம்பம்- 2022

இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் ஆசான்கள்



திரு. வே.ஜீவானந்தன்

M.A. (Political Science),B.L., PGDPM

கோவையைச் சேர்ந்த திரு. ஜீவா (எ) வே.ஜீவானந்தம் (66), வழக்குரைஞர், ஓவியர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்; தமிழகம் அறிந்த ஓவியர். கோவையில் செயல்படும் ஓவியர் அமைப்பான சித்ரகலா அகாதெமியின் தலைவர். இந்த அமைப்பு, 45 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் கோவையில் காலையில் குழந்தைகளுக்கு ஓவிய வகுப்புகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்தி வருகிறது. தவிர, ஓவியப்போட்டிகள், ஓவியக் கண்காட்சிகளையும் நடத்துகிறது.

ஆரம்பக் காலத்தில் மாணவப் பத்திரிகையாளராக இருந்துள்ளார். ‘திரைச்சீலை’, ‘ஒரு பீடியுண்டோ சகாவே’ ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ‘திரைச்சீலை’ நூலுக்கு 210ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருது ஜனாதிபதி கரங்களால் கிடைத்தது. 2018இல் சிறுவாணி வாசகர் மைய விருது பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நூல்களின் அட்டைப்படம் வரைவதில் நிபுணர். இவர் ஒரு சிறந்த திரை விமர்சகரும் கூட.

$$$

திரு. ஒத்திசைவு வெ.ராமசாமி

B.Tech. (Metallurgy)

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிறந்தவர் திரு. ஒத்திசைவு ராமசாமி (56), சென்னை ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது பெங்களூரில் வசிக்கிறார். பழமையிலும் பாரம்பரியத்திலும் தீவிர நம்பிக்கை கொண்டவர். வங்கிப் பணி, கணினித் தொழில்நுட்பம், மின்னியல், ஜவுளித் துறை, பள்ளி ஆசிரியர் எனப் பல துறைகளில் பணியாற்றியவர். அகில பாரத அளவில், பல்லாயிரம் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கணினிசார் கல்விக்கான மென்பொருள் உருவாக்கக் குழுவுக்கு தலைமை தாங்கியவர்.

தற்போது மின்னியல் சார்ந்த கருவிகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளார். ‘ஒத்திசைவு’ என்ற இணையதளம் மூலமாக, சமூகத்தைச் சரிப்படுத்தும் துணிவான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பாரதீயம், தொழில்நுட்பம், அறிவியல், மொழிகள், வரலாறு என பல துறைகளில் எழுதி வருபவர்.

இவரது இணையதளம்: http://othisaivu.in

$$$

திரு. வி.வி.பாலா

B.Com, M. A (Philosophy), PG Diploma in Journalism

கோவை, போத்தனூரைப் பூர்வீகமாகக் கொண்டவர், திரு. வி.வி.பாலா (54). கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ‘சுதேசமித்திரன்’ தமிழ்ப் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சட்டக் கல்வி பயின்றவுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டு, யோகா பயிற்சி ஆசிரியரானார்.

விவேகானந்த கேந்திரம் என்னும் சமூக சேவை அமைப்பில் 2007ஆம் ஆண்டு முதல் முழுநேர ஊழியராக உள்ளார். அதன் வெளியீட்டுத் துறை நிர்வாகியாக பத்தாண்டுகளாக சென்னையில் இருந்தபடி செயல்படுகிறார். ‘யுவபாரதி’ மாத இதழின் ஆசிரியர். யோகா ஆசிரியர்கள் பலரை உருவாக்கி உள்ளார். விவேகானந்த கேந்திரத்தின் சுய முன்னேற்ற, ஆளுமைப் பண்புப் பயிற்சி வகுப்புகள் பலவற்றை நடத்தி வருகிறார்.

$$$

திரு. மது.ஜெகதீஷ்

DME, Post Diploma in CA, B.Tech. (Industrial Engineering)

பொள்ளாச்சியில் வசிக்கும் திரு. மது ஜெகதீஷ் (எ) ஜெ.மதுராந்தகன் (53), தொழில்நுட்ப வல்லுநர், மென்பொருள் உருவாக்க மையத்தின் நிறுவனர், கணினிக் கல்விப் பயிற்றுநர், சிற்பக்கலை புகைப்படக் கலைஞர், இயற்கை- வனவிலங்கு ஆர்வலர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். தேசிய அளவிலான புகைப்படக் கண்காட்சிகளில் பங்கேற்றவர்.

தனது 21ஆம் வயதிலேயே தொழில் நிறுவனத்தை தொடங்கிய இளம் தொழில் முனைவோரான இவர் உருவாக்கிய நூற்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டு மென்பொருள்கள், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரத்துக்கு மேற்பட்ட மானவர்களுக்கு கணினிக் கல்விப் பயிற்சி அளித்துள்ளார். இவரது கோயில் கட்டடக் கலை, சிற்பக்கலை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அழகிய புகைப்படங்கள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. வனவிலங்கு- கானுயிர்- சுற்றுச்சூழல் தொடர்பான இவரது புகைப்படங்கள் இயற்கையை நேசிப்போருக்கு மிகவும் பிடித்தமானவை.

இவரது வலைப்பூ: https://madhujagdhish.blogspot.com

$$$

திருமதி சி.குமரேஸ்வரி

M.A, M.Phil., B.Ed,

திருப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான திருமதி சி.குமரேஸ்வரி (39), 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். அய்யன்காளிபாளையம், வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிகிறார். ஆங்கிலத்தில் உள்ள வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் அமைப்பின் அறிவியல் திறன் நூல்களை தமிழாக்கி இருக்கிறார்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், என்சிஇஆர்டி, தீக்‌ஷா ஆகிய அமைப்புகளில் ஆசிரியர் பயிற்சியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் ஹைடெக் இ-லேப் திட்டத்தின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். மாணவர்களின் ஆங்கில மொழியறிவை வளர்க்க இணையவழியில் ஒலிப்பேழைகளை வெளியிட்டு வருகிறார். ஆசிரியர் பணியை ஒரு தொழிலாகக் கருதாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் சேவையாகக் கருதிப் பணியாற்றுபவர்.

$$$




அறம் வித்யாரம்பம் -2022 விழா அறிவிப்பு



 

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 

ஒன்பதாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா
_____________________________________________

திருப்பூர் அறம் அறக்கட்டளை, ஒன்பதாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது.

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 160 மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு 2019 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் கால தடை காரணமாக, இவ்விழாவை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு எழுத்தற்வித்தல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நிகழ உள்ளது.

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், ஜோ.டி. குரூஸ்,  சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன், பெருமாள்முருகன், தேவதாஸ்,  தஞ்சை வெ.கோபாலன், பேரா. ம.வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா,  கோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, பேரா. கனகசபாபதி, பேரா.ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், ராம.கோபால்ரத்தினம் உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு எழுத்தறிவித்தலுக்கான ஆயத்தப் பணிகள் இன்று (மகாளய அமாவாசை) துவங்கி உள்ளன. விழா விவரம்:

எழுத்தறிவித்தல் விழா 2022

நாள்: விஜயதசமி நன்னாள், 05.10.2022, புதன்கிழமை
நேரம்: காலை 9.00 மணி - 12.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர்.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:

1. ஶ்ரீ. வே.ஜீவானந்தன், ஓவியர், கோவை
2. ஸ்ரீ. ஒத்திசைவு வெ.ராமசாமி, கல்வியாளர், பெங்களூரு
3. ஶ்ரீ. வி.வி.பாலா, ஆசிரியர், யுவபாரதி, சென்னை
4. ஶ்ரீ. மது.ஜெகதீஷ், சிற்பப் புகைப்படக் கலைஞர், பொள்ளாச்சி
5. ஶ்ரீமதி. சி.குமரேஸ்வரி, நல்லாசிரியர், திருப்பூர்.
 
_________________________________________________________

முன்பதிவுக்கு:

கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 98422 27505
கு.சிவகுமார்- 98949 33877


செவ்வாய், 8 அக்டோபர், 2019

வித்யாரம்பம்-2019 செய்தியும் படங்களும்

திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்திய
வித்யாரம்ப விழா: 320 குழந்தைகள் பங்கேற்பு


திருப்பூர், அக். 8: அறம் அறக்கட்டளையும் திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய வித்யாரம்பம் விழா (எழுத்தறிவித்தல்) விஜயதசமி திருநாளான 08.10.2019 செவ்வாய்க்கிழமை, காலை 7 மணி முதல் மதியம்1.00 மணி வரை திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.

வீணை இசைக் கலைஞர் திரு.ஆர்.ஜே.ராஜ்குமாரின் இன்னிசையுடன் விழா தொடங்கியது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளருமான திருப்பூர் கிருஷ்ணன், சமூகசேவகர் ராம்.கோபால் ரத்தினம், நல்லாசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலருமான க.பழனிசாமி, முன்னாள் தேசிய வாலிபால் வீரர் ஆர்.தேவராஜன், வீணை இசைக் கலைஞர் ஆர்.ஜே.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று எழுத்தறிவித்தலை நடத்திவைத்தனர்.

மழலைகளின் நாவில் தர்ப்பைப்புல் கொண்டு தூய தேன் தொட்டு ஓம்காரம் எழுதி, நெல் மணிகளில் கைகளைப் பிடித்து அகரத்தை எழுத வைத்தனர். இவ்விழாவில் குழந்தைகள் சுமார் 320க்கும் மேற்பட்டோர் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சிலேட்டு, பல்பம், வண்ணப்படப் புத்தகம், வண்ண மெழுகு பென்சில்கள், திருக்குறள், வாய்பாடு புத்தகம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

அறம் அறக்கட்டளையின் உறுப்பினர் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், ஸ்ரீ சக்தி மாடர்ன் பள்ளி, டி.எஸ்.எஸ்.ஐ.கிட்ஸ்ஜோன் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எழுத்தறிவிக்கிறார் எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன்.

எழுத்தறிவிக்கிறார் சமூக சேவகர் திரு. ராம்.கோபால்ரத்னம்.

எழுத்தறிவிக்கிறார் நல்லாசிரியர் திரு. க.பழனிசாமி

எழுத்தறிவிக்கிறார் வீணை இசைக் கலைஞர் திரு. ராஜ்குமார்

எழுத்தறிவிக்கிறார் முன்னாள் தேசிய கைப்பந்து வீரர் திரு.தேவராஜன்

அன்பளிப்புப் பொருள்களுடன் மகிழ்ச்சியில் குழந்தைகள்.




 


சனி, 5 அக்டோபர், 2019

வித்யாரம்பம்- 2019 எழுத்தறிவிப்போர்

அறம் அறக்கட்டளை, திருப்பூர் 
திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூசன்ஸ் 
இணைந்து நடத்தும்
எட்டாம் ஆண்டு  எழுத்தறிவித்தல் விழா 




நாள்: விஜயதசமி நன்னாள், 
தேதி: 08.10.2019, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 7.00 மணி - 11.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர். 

***

இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் சான்றோர்: 

* ஶ்ரீ. திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை.
* ஶ்ரீ. க.பழனிசாமி, நல்லாசிரியர், தெக்கலூர்.
* ஶ்ரீ. ராம்.கோபால்ரத்தினம், சமூக சேவகர், திருச்சி.
* ஶ்ரீ. ச.ஆரோக்கியசாமி, எழுத்தாளர், புதுக்கோட்டை.
* ஶ்ரீ. ஆர்.தேவராஜன், தேசிய கைப்பந்து வீரர், திருப்பூர்.
* 6. ஶ்ரீ. ஆர்.ராஜ்குமார், வீணை இசைக் கலைஞர், திருப்பூர். 


----------------------------------------------------------------------------------------------------------

திரு. திருப்பூர் கிருஷ்ணன்
MA , PhD


திருப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த பத்திரிகையாளர். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தினமணி, தீபம் பத்திரிகைகளில் பணி புரிந்தவர். அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். தற்போது, அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய - ஆன்மிகச் சொற்பொழிவாளர், தொலைக்காட்சி, வானொலிகளில் நிகழ்ச்சி வழங்குபவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். பல நூல்களை எழுதி உள்ளார்.

ஹரிவம்சராய் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.



திரு. க.பழனிசாமி
MA, MSc, M.phil, Bed.

திருப்பூர் மாவட்டம், தெக்கலூரைச் சேர்ந்தவர். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பணியையும் கூடுதலாகக் கவனிக்கிறார்.

2017-18 கல்வி ஆண்டில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர். பள்ளிக் கல்வித் துறையின் சாதனையாளர் விருதை 2010, 2015, 2016 ஆண்டுகளில் பெற்றவர். விவேகானந்தர் சேவா சங்கம் மூலம் வழங்கப்பட்ட சமூக சேவைக்கான விருது, சென்னை ஸ்ரீநிவாச இராமானுஜன் அறக்கட்டளை மூலம் ஆசிரியப் புரட்சியாளர் விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

பல இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், 31 ஆண்டுகாலமாக ஆசிரியர் என பல தளங்களில் இயங்கி வருபவர்.

திரு. ராம்.கோபால்ரத்தினம்
BE, MTech, BA (Psy)

நாகபுரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்; திருச்சிராப்பள்ளியில் வசிக்கும் சமூக சேவகர். உலோகவியலில் பொறியியல் பட்டமும் (1980), இரும்புக் கலப்பு உலோகம் தொடர்பாக எம்.டெக். பட்டமும் (1983), உளவியலில் பி.ஏ.பட்டமும் (2002) பெற்றவர். தமிழ், மராத்தி, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.

இளைஞர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்க, ‘சாணக்யா’ தலைமைப் பண்பு பயிற்சி நிறுவனத்தைத் துவக்கியவர். ஊரகப் பகுதியிலும் ஹரிஜனப் பகுதிகளிலும் கல்வி வளர்ச்சிக்காக ‘வேதவியாஸா’ அறக்கட்டளையை நடத்தி வருபவர். யோகக்கலையின் வளர்ச்சிக்காக நிராமய யோகா கேந்திரம் என்ற அமைப்பையும், இயற்கைப் பாதுகாப்புக்காக சர்வபூத ஹிதய நியாஸ் அமைப்பையும் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். 2015 முதல் பகவத்கீதை பிரசாரப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது கீதை உரைகள் தினசரி சமூக ஊடகங்களில் வெளியாகின்றன (https://www.youtube.com/user/agoram476).

யோகக்கலை, பகவத் கீதை, சுய முனேற்றம், தலைமைப் பண்பு ஆகிய தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் 40க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். கல்வி நிறுவனங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் ஆளுமை வளர்ப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

திரு.ஆர்.தேவராஜன் 

கோவை, உப்பிலிபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்; திருப்பூரில் வசிக்கும் முன்னாள் தேசிய கைப்பந்து வீரர். 67 வயதிலும் விளையாட்டுத் துறை முன்னேற்றத்துக்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்.

கைப்பந்து விளையாட்டில், தமிழக, தேசிய அணிகளில் 16 ஆண்டுகளாக வீரராக இருந்தவர். 1976-இல் இவர் இடம் பெற்றிருந்த தமிழக அணி தேசிய அளவில் வாகை சூடியது; உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் கைப்பந்து வீரர்களை உருவாக்கி வருகிறார். தற்போது மாநில கைப்பந்துக் கழகத்தின் தேர்வுக் குழு உறுப்பினராக வழிகாட்டி வருகிறார்.

திரு. ச.ஆரோக்கியசாமி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மின்வாரியத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மின்வாரிய தொழிற்சங்கத் தலைவராகவும், இடதுசாரி பத்திரிகையான தீக்கதிரில் துணை ஆசிரியராகவும் (1985- 1990) இருந்துள்ளார். பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

மாநிலம் முழுவதும், பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர்; மேடைப் பேச்சாளர்; சர்வோதய மலர்கள் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருபவர். ‘அரியணை ஏறிய பொய்கள், உயிர்த்தெழுமா கம்யூனிஸம்? பெரியார் பெரியாரா? வர்ணம், ஜாதி, தீண்டாமை- இந்தியாவில் மட்டுமா?’ ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.

திரு.ஆர். ராஜ்குமார்
BSc, BGL, LLB, ML, MBA,
M.Sc (Psy), D-Astro, Doctorate in MGT.


பல துறைகளில் கல்வியும் மேலாண்மைத் துறையில் நிபுணத்துவமும் கொண்டவர். வீணை இசைக் கலைஞராக தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்தவர். தான் பணிபுரிந்த நிறுவனங்களில் வளர்ச்சியை நிரூபித்துக் காட்டியவர். தற்போது திருப்பூரில் உள்ள ஏஞ்சல் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

ஏழு வயதில் இருந்தே வீணை இசைக் கலைஞராக உள்ளார்; இதுவரை 2000க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் இவரது நிகழ்ச்சிகள் ஒலி- ஒளிபரப்பாகி உள்ளன. வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நோய்களைக் குணப்படுத்துவதில் இசையின் பங்களிப்பு தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.




வியாழன், 3 அக்டோபர், 2019

வித்யாரம்பம்- 2019 துண்டுப்பிரசுரமும் சுவரொட்டியும்.

துண்டுப் பிரசுரம் 

எண்ணிக்கை: 15,000
ஸ்பான்ஸர்: சாந்தி ஜூனியர்ஸ்



சுவரொட்டி

1000 எண்ணிக்கை
ஸ்பான்ஸர்: சுப்ரீம் மொபைல்ஸ்