செவ்வாய், 8 அக்டோபர், 2019

வித்யாரம்பம்-2019 செய்தியும் படங்களும்

திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்திய
வித்யாரம்ப விழா: 320 குழந்தைகள் பங்கேற்பு


திருப்பூர், அக். 8: அறம் அறக்கட்டளையும் திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய வித்யாரம்பம் விழா (எழுத்தறிவித்தல்) விஜயதசமி திருநாளான 08.10.2019 செவ்வாய்க்கிழமை, காலை 7 மணி முதல் மதியம்1.00 மணி வரை திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.

வீணை இசைக் கலைஞர் திரு.ஆர்.ஜே.ராஜ்குமாரின் இன்னிசையுடன் விழா தொடங்கியது. அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளருமான திருப்பூர் கிருஷ்ணன், சமூகசேவகர் ராம்.கோபால் ரத்தினம், நல்லாசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலருமான க.பழனிசாமி, முன்னாள் தேசிய வாலிபால் வீரர் ஆர்.தேவராஜன், வீணை இசைக் கலைஞர் ஆர்.ஜே.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று எழுத்தறிவித்தலை நடத்திவைத்தனர்.

மழலைகளின் நாவில் தர்ப்பைப்புல் கொண்டு தூய தேன் தொட்டு ஓம்காரம் எழுதி, நெல் மணிகளில் கைகளைப் பிடித்து அகரத்தை எழுத வைத்தனர். இவ்விழாவில் குழந்தைகள் சுமார் 320க்கும் மேற்பட்டோர் பெற்றோர், உறவினர்களுடன் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சிலேட்டு, பல்பம், வண்ணப்படப் புத்தகம், வண்ண மெழுகு பென்சில்கள், திருக்குறள், வாய்பாடு புத்தகம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

அறம் அறக்கட்டளையின் உறுப்பினர் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், ஸ்ரீ சக்தி மாடர்ன் பள்ளி, டி.எஸ்.எஸ்.ஐ.கிட்ஸ்ஜோன் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எழுத்தறிவிக்கிறார் எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன்.

எழுத்தறிவிக்கிறார் சமூக சேவகர் திரு. ராம்.கோபால்ரத்னம்.

எழுத்தறிவிக்கிறார் நல்லாசிரியர் திரு. க.பழனிசாமி

எழுத்தறிவிக்கிறார் வீணை இசைக் கலைஞர் திரு. ராஜ்குமார்

எழுத்தறிவிக்கிறார் முன்னாள் தேசிய கைப்பந்து வீரர் திரு.தேவராஜன்

அன்பளிப்புப் பொருள்களுடன் மகிழ்ச்சியில் குழந்தைகள்.




 


சனி, 5 அக்டோபர், 2019

வித்யாரம்பம்- 2019 எழுத்தறிவிப்போர்

அறம் அறக்கட்டளை, திருப்பூர் 
திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூசன்ஸ் 
இணைந்து நடத்தும்
எட்டாம் ஆண்டு  எழுத்தறிவித்தல் விழா 




நாள்: விஜயதசமி நன்னாள், 
தேதி: 08.10.2019, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 7.00 மணி - 11.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர். 

***

இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் சான்றோர்: 

* ஶ்ரீ. திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை.
* ஶ்ரீ. க.பழனிசாமி, நல்லாசிரியர், தெக்கலூர்.
* ஶ்ரீ. ராம்.கோபால்ரத்தினம், சமூக சேவகர், திருச்சி.
* ஶ்ரீ. ச.ஆரோக்கியசாமி, எழுத்தாளர், புதுக்கோட்டை.
* ஶ்ரீ. ஆர்.தேவராஜன், தேசிய கைப்பந்து வீரர், திருப்பூர்.
* 6. ஶ்ரீ. ஆர்.ராஜ்குமார், வீணை இசைக் கலைஞர், திருப்பூர். 


----------------------------------------------------------------------------------------------------------

திரு. திருப்பூர் கிருஷ்ணன்
MA , PhD


திருப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த பத்திரிகையாளர். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தினமணி, தீபம் பத்திரிகைகளில் பணி புரிந்தவர். அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். தற்போது, அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய - ஆன்மிகச் சொற்பொழிவாளர், தொலைக்காட்சி, வானொலிகளில் நிகழ்ச்சி வழங்குபவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். பல நூல்களை எழுதி உள்ளார்.

ஹரிவம்சராய் பெயரிலான அகில இந்திய ஆசீர்வாத் விருது, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இதழியல் வல்லுநர் விருது, பாரதியார் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.



திரு. க.பழனிசாமி
MA, MSc, M.phil, Bed.

திருப்பூர் மாவட்டம், தெக்கலூரைச் சேர்ந்தவர். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பணியையும் கூடுதலாகக் கவனிக்கிறார்.

2017-18 கல்வி ஆண்டில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர். பள்ளிக் கல்வித் துறையின் சாதனையாளர் விருதை 2010, 2015, 2016 ஆண்டுகளில் பெற்றவர். விவேகானந்தர் சேவா சங்கம் மூலம் வழங்கப்பட்ட சமூக சேவைக்கான விருது, சென்னை ஸ்ரீநிவாச இராமானுஜன் அறக்கட்டளை மூலம் ஆசிரியப் புரட்சியாளர் விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

பல இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், 31 ஆண்டுகாலமாக ஆசிரியர் என பல தளங்களில் இயங்கி வருபவர்.

திரு. ராம்.கோபால்ரத்தினம்
BE, MTech, BA (Psy)

நாகபுரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்; திருச்சிராப்பள்ளியில் வசிக்கும் சமூக சேவகர். உலோகவியலில் பொறியியல் பட்டமும் (1980), இரும்புக் கலப்பு உலோகம் தொடர்பாக எம்.டெக். பட்டமும் (1983), உளவியலில் பி.ஏ.பட்டமும் (2002) பெற்றவர். தமிழ், மராத்தி, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.

இளைஞர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்க, ‘சாணக்யா’ தலைமைப் பண்பு பயிற்சி நிறுவனத்தைத் துவக்கியவர். ஊரகப் பகுதியிலும் ஹரிஜனப் பகுதிகளிலும் கல்வி வளர்ச்சிக்காக ‘வேதவியாஸா’ அறக்கட்டளையை நடத்தி வருபவர். யோகக்கலையின் வளர்ச்சிக்காக நிராமய யோகா கேந்திரம் என்ற அமைப்பையும், இயற்கைப் பாதுகாப்புக்காக சர்வபூத ஹிதய நியாஸ் அமைப்பையும் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். 2015 முதல் பகவத்கீதை பிரசாரப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது கீதை உரைகள் தினசரி சமூக ஊடகங்களில் வெளியாகின்றன (https://www.youtube.com/user/agoram476).

யோகக்கலை, பகவத் கீதை, சுய முனேற்றம், தலைமைப் பண்பு ஆகிய தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் 40க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். கல்வி நிறுவனங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் ஆளுமை வளர்ப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

திரு.ஆர்.தேவராஜன் 

கோவை, உப்பிலிபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்; திருப்பூரில் வசிக்கும் முன்னாள் தேசிய கைப்பந்து வீரர். 67 வயதிலும் விளையாட்டுத் துறை முன்னேற்றத்துக்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்.

கைப்பந்து விளையாட்டில், தமிழக, தேசிய அணிகளில் 16 ஆண்டுகளாக வீரராக இருந்தவர். 1976-இல் இவர் இடம் பெற்றிருந்த தமிழக அணி தேசிய அளவில் வாகை சூடியது; உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் கைப்பந்து வீரர்களை உருவாக்கி வருகிறார். தற்போது மாநில கைப்பந்துக் கழகத்தின் தேர்வுக் குழு உறுப்பினராக வழிகாட்டி வருகிறார்.

திரு. ச.ஆரோக்கியசாமி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மின்வாரியத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மின்வாரிய தொழிற்சங்கத் தலைவராகவும், இடதுசாரி பத்திரிகையான தீக்கதிரில் துணை ஆசிரியராகவும் (1985- 1990) இருந்துள்ளார். பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

மாநிலம் முழுவதும், பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர்; மேடைப் பேச்சாளர்; சர்வோதய மலர்கள் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருபவர். ‘அரியணை ஏறிய பொய்கள், உயிர்த்தெழுமா கம்யூனிஸம்? பெரியார் பெரியாரா? வர்ணம், ஜாதி, தீண்டாமை- இந்தியாவில் மட்டுமா?’ ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.

திரு.ஆர். ராஜ்குமார்
BSc, BGL, LLB, ML, MBA,
M.Sc (Psy), D-Astro, Doctorate in MGT.


பல துறைகளில் கல்வியும் மேலாண்மைத் துறையில் நிபுணத்துவமும் கொண்டவர். வீணை இசைக் கலைஞராக தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்தவர். தான் பணிபுரிந்த நிறுவனங்களில் வளர்ச்சியை நிரூபித்துக் காட்டியவர். தற்போது திருப்பூரில் உள்ள ஏஞ்சல் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

ஏழு வயதில் இருந்தே வீணை இசைக் கலைஞராக உள்ளார்; இதுவரை 2000க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் இவரது நிகழ்ச்சிகள் ஒலி- ஒளிபரப்பாகி உள்ளன. வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நோய்களைக் குணப்படுத்துவதில் இசையின் பங்களிப்பு தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.




வியாழன், 3 அக்டோபர், 2019

வித்யாரம்பம்- 2019 துண்டுப்பிரசுரமும் சுவரொட்டியும்.

துண்டுப் பிரசுரம் 

எண்ணிக்கை: 15,000
ஸ்பான்ஸர்: சாந்தி ஜூனியர்ஸ்



சுவரொட்டி

1000 எண்ணிக்கை
ஸ்பான்ஸர்: சுப்ரீம் மொபைல்ஸ்


புதன், 2 அக்டோபர், 2019

எழுத்தறிவித்தோரும், எழுத்தறிவிப்போரும்


அறம்- எழுத்தறிவித்தல் விழா-2019

-------------------------------------------------------
(இன்னும் 5 நாள்களே உள்ளன...)

*
அறம் அறக்கட்டளை, திருப்பூர்
(பதிவு எண்: 1432/ 2012).

திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ்

இணைந்து நடத்தும்

எழுத்தறிவித்தல் விழா- 2019

*

நாள்: விஜயதசமி நன்னாள், 08.10.2019 செவ்வாய்க்கிழமை

நேரம். காலை: 7.00 மணி முதல் 11.00 மணி வரை.

இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்.

அனுமதி இலவசம்...
முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ.பக்தவத்சலம்- 94865 93100,
ஆர்.ராமகிருஷ்ணன்- 86752 50005

______________________________________________________

இதுவரை இந்நிகழ்வில் எழுத்தறிவித்த திருவாளர்கள்:

2012
எழுத்தாளர் ஜெயமோகன்,
ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்,
பேராசிரியர் ப.கனகசபாபதி,
நடராஜ குருக்கள்,

2013
எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,
பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்,
தமிழ் ஹிந்து இணையதள நிர்வாகி ஜடாயு,
ஆராய்ச்சியாளர் ம.வெங்கடேசன்,
சமூகசேவகர் சரஸ்வதி (2013),

2014
எழுத்தாளர் பெருமாள் முருகன்,
கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன்,
எழுத்தாளர் சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன்,
எழுத்தாளர் மோகனரங்கன்,

2015
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்,
எழுத்தாளர் சா.தேவதாஸ்,
எழுத்தாளர் சு.வேணுகோபால்,
கவிஞர் இசை,

2016
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்,
பேராசிரியர் ம.வே.பசுபதி,
பாரதி இலக்கிய பயிலரங்க நிறுவனர் தஞ்சை வெ.கோபாலன்,
எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்,

2017
எழுத்தாளர் சாரு நிவேதிதா,
பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்,
மருத்துவர் ஆர்.சுனில்கிருஷ்ணன்,
கவிஞர் கோ.மகுடேஸ்வரன்

2018
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,
கோவை.
‘வலம்’ இதழின் பொறுப்பாசிரியர் வி.ஹரன் பிரசன்னா,
சென்னை.
கனவு ஆசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார்,
மதுரை.
நல்லாசிரியை மு.கற்பகம் ராமசாமி,
திருப்பூர்.

இந்த ஆண்டு (2019) எழுத்தறிவித்தல் விழாவில் 
பங்கேற்கும் திருவாளர்கள்:

1. திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை.
2. க.பழனிசாமி, நல்லாசிரியர், திருப்பூர்.
3. ராம.கோபால்ரத்தினம், சமூக சேவகர், திருச்சி.
4. எஸ்.ஆரோக்கியசாமி, எழுத்தாளர், புதுக்கோட்டை.
5. தேவராஜ், தேசிய கைப்பந்து வீரர், திருப்பூர்.
6. ஆர்.ராஜ்குமார், வீணை இசைக் கலைஞர், திருப்பூர்.